மார்த்தாண்டம், செப்.02.
கேரள மாநில சிவசேனா செயலாளர் சதீசன் அதுல் (32) கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 முக்கிய குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த மாதம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கண்ணக்கோடு பகுதி அருகே வாலிபர் ஒருவரின் உடல் மிதப்பதாக பொதுமக்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், அவர் களியக்காவிளை அருகே செங்கவிளை பகுதியைச் சேர்ந்த சதீசன் அதுல் என்பதும், கேரள மாநில சிவசேனா கட்சியின் செயலாளராக இருந்ததும் தெரியவந்தது.
சதீசன் அதுலின் உடலில் சிவசேனா கட்சி தொடர்பான பச்சைக் குத்தல்கள் மற்றும் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதையடுத்து உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவரது தலையில் ஆழமான காயம் இருந்ததும், ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதும் தெரியவந்தது.
மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்பேரில், மார்த்தாண்டம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. குமரி எல்லை மற்றும் மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சதீசன் அதுலின் கார் சென்ற வழித்தடங்களில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவின்படி, குழித்துறை கல்லுக்கட்டியைச் சேர்ந்த அஜித் (23), பாகோடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் (31), மார்த்தாண்டம் பம்மம் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி (29), உண்ணாமலைக்கடை ஆர்.சி. தெருவைச் சேர்ந்த நிதிஷ் (24) ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.



