நாகர்கோவில், ஜூன் 18 –
தோவாளை ஒன்றியத்துக்குட்பட்ட அஞ்சுகிராமம் பேரூராட்சி, பீமநகரி மற்றும் திருப்பதிச்சாரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது:-
அஞ்சுகிராமம் முதல்நிலை பேரூராட்சியில் மூலதன மானிய நிதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை கட்டிமுடிக்கப்பட்டு, அனைத்து தரப்பட்ட மக்களும் இந்த நவீன எரிவாயு தகன மேடையினை பயன்படுத்திக்கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
அழகப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 15 வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறையிலிருந்து அழகப்பபுரம் வழியாக வாய்க்காலில் செல்லும் தண்ணீரானது, செங்குளத்தில் சேமித்து வைத்து பாசன வசதிக்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாய்க்கால்களின் கரையோரம் உள்ள வீடுகளிலிருந்து கழிவுநீர் திறந்து விடுவதாகவும், அவற்றினை தடுத்திடுமாறும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையின் அடிப்படையில் கழிவுநீரை திறந்துவிடும் வீடுகளின் குழாய்களை மூடுவதற்கு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பெருமாள்நகரில் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நாற்றங்கால் பண்ணையில் 10,000 மரங்கள் உள்ளன. 6 அடிக்கு மேல் வளர்ந்த பிறகு அனைத்து மரக்கன்றுகளையும் சாலை ஓரங்களில் மரகன்றுகளை நட்டிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து சடையால்புரம் கிராமத்தில் பழையாறு ஆற்றுப்படுகையில் ரூ.20 இலட்சம் மதிப்பில் உறைகிணறு அமைந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் பீமநகரி ஊராட்சியில் அன்னை நகர் பகுதியில் ரூ.18.36 இலட்சம் மதிப்பில் கிராம ஊராட்சி சேவை மையத்தில் செல்லும் அணுகு கான்கீரிட் சாலை அமைக்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து, அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார்.
நடைபெற்ற ஆய்வுகளில் உதவி இயக்குநர் பேரூராட்சிகள் கோமதி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் உஷா கிரேஸ் (அஞ்சுகிராமம்), பூதப்பாண்டி (அழகப்பபுரம்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



