சிவகங்கை, பிப். 21 –
சிவகங்கை நகர் தொண்டி ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் முழு உருவச் சிலைகளை தமிழ்நாடு முதல்வர் மதுரையில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்தச் சிலைகள் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ரூ. 106.9 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டது. நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேசும்போது: கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு 130 நினைவு மண்டபங்கள் மற்றும் சிலைகளை அமைத்துள்ளது. ஆனால் கடந்த அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் 30 நினைவு மண்டபங்களை மட்டுமே திறந்தனர் என்றார்.
தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பேசும்போது: திராவிட மாடல் ஆட்சி 2.0 வில் சிவகங்கை மாவட்டத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



