நாகர்கோவில், மார்ச் 17 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அரசு அலுவலங்களில் உள்ள அரசு வளாகம் மற்றும் கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள் 24 மணி நேரத்திற்குள் அழிக்க மற்றும் அகற்றப்பட்டுள்ளது.
பொதுவளாகம், கட்டிடங்கள், பேருந்து நிறுத்தம், ரயில்வே நிலையம், பாலங்கள், மின் கம்பங்கள், உள்ளாட்சிக்குட்பட்ட கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்திற்குள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் தனியார் வளாகம் மற்றும் கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், கட்சிக்கொடிகள் 72 மணி நேரத்திற்குள் அகற்ற துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வருகின்ற 23.04.2026 அன்று சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1914 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தொகுதி வாரிய மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் உள்ளிட்ட இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்துவரப்பட்டு, கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அந்ததந்த தொகுதிக்கென அமைக்கப்படும் வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
இந்த வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா உள்ளிட்ட துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



