கிருஷ்ணகிரி, ஏப்ரல் 28 –
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றியம் கே. எட்டிப்பட்டி ஊராட்சி கரடி கவுண்டனூர் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் பைப் லைன் சேதப்படுத்தியது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி
உதவி இயக்குனர் ஊராட்சிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மேற்படி சம்பவ இடத்தினை பார்வையிட்டு சுமார் 200 குடும்பங்களுக்கு தண்ணீர் செல்லும் பைப் லைன் உடனடியாக சரி செய்து குடிநீர் வழங்க வழிவகை செய்துள்ளனர்.
மேலும் இளவரசன் என்பவர் தனது வீட்டிற்கு முறையற்ற குடிநீர் இணைப்பு எடுத்த காரணத்தினால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் அடிப்படையில் மேற்கண்ட குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கே. எட்டிப்பட்டி ஊராட்சி செயலாளர் பி. சரவணன் ஊத்தங்கரை வட்டம் சாமல்பட்டி காவல் நிலையத்தில் இளவரசன், ஜெயவேல், அரசு, ஜெய்சங்கர் ஆகியோர் குடிநீர் பைப் லைன்களை சேதப்படுத்தியது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி சாமல்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா தெரிவித்துள்ளார்.


