பரமக்குடி, ஆக. 29 –
பரமக்குடி அருகே கடந்த வாரம் மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி நிதி உதவி வழங்கினார். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே உள்ள வாழவந்தால்புரம் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீன், இவரின் மகள்கள் செய்யது ஆஸ்பியா பானு (13), சபிக்கா பானு (9) இருவரும் ஒன்பதாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 23-ம் தேதி மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்களின் குடும்பத்தினரை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார். இதில் திமுக போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாவட்ட பிரதிநிதி கார்த்திக் பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் துணைத் தலைவர் வேலுச்சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் அப்துல் ஜப்பார், இளைஞரணி மாநில துணைத்தலைவர் நெய்னா முகம்மது, ஆற்றங்கரை ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் நூருல் அஃபான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



