மார்த்தாண்டம், ஜன. 21 –
தமிழகத்தில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக மீனவ கிராமங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ய கூடாது என்று ஊர் கட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில் மீனவ கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நீரோடி பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்வதாக கொல்லங்கோடு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடையை சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 135 பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் நீரோடி பகுதி சேர்ந்த நிர்மலா (67) என்ற மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


