நாகர்கோவில், மார். 4 –
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னையிலிருந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடியில் புதிய மீன் இறங்குதளம் மற்றும் குளச்சல் துறைமுக விரிவாக்க பணி அமைக்க காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வாணியக்குடி மற்றும் குளச்சல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசுகையில்: வாணியக்குடியில் மீன்பிடி தொழில் செய்வதற்கு எவ்வித உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாத காரணத்தினால், புதிய மீன்பிடி துறைமுகம் அமைப்பது என்பது நம்முடைய தேர்தல் அறிக்கையில் உள்ள ஒரு அறிக்கையாகும்.
அதனை நிறைவேற்றுகின்ற விதமாக தற்போது ரூ.150 கோடி மதிப்பில் வாணியக்குடி மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வர் அடிக்கல் நாட்டி உள்ளார்.
தொடர்ந்து குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விரிவாக்க பணிக்காக ரூ.150.00 கோடி ஒதுக்கப்பட்டு, இன்று பணிகள் துவக்கப்பட்டுள்ளது என கூறினார்.
நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், மீன்பிடித் துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் பிரேமலதா, துறை அலுவலர்கள், பணியாளர்கள், மீனவ பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



