நாகர்கோவில், மே 22 –
கன்னியாகுமரி மாவட்ட வனவிலங்கு சரணாலயம், மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முனைவர் அன்பு உத்தரவின் பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ந.அன்பழகன் தலைமையில் சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம் இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி உதவி வேளாண்மை அலுவலர் டி.அனந்த பத்மநாபன், உள்ளாட்சித் துறை அலுவலர்களுடன் இணைத்து சமத்துவபுரத்தில் விவசாய பெருமக்கள், தன்னார்வலர்கள் பங்களிப்பில் பல்லுயிர் பெருக்கம் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் நடப்படும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் பூமியின் சமநிலைக்கும் மனிதகுலத்தின் தொடர்ச்சியான வாழ்விற்கும் பல்லுயிர் பெருக்கம் இன்றியமையாதது.
எனவே அன்றாட வாழ்க்கையில் தாவரங்கள், விலங்குகள் மற்றும் இயற்கையின் சமநிலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் செயல்படுவேண்டும். இயற்கையை நேசித்து மரங்களை வளர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து, நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்ய வேண்டும்.
பூமியின் பல்லுயிர் வளத்தைக் காப்பது நமது தலையாய கடமை என்பதை உணர்ந்து, எதிர்கால சந்ததியினருக்காக பசுமையான மற்றும் வளமான உலகத்தை உருவாக்க முழுமையாகப் பாடுபடவேண்டும் என வனச்சரக அலுவலர் அன்பழகன் விளக்கிகூறினார். முடிவில் ‘இயற்கையையும் உயிரினங்களின் சமநிலையையும் பாதுகாப்போம்’ என உறுதி மொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி பிரிவு வனவர் மணிகண்டன், வனக்காப்பாளர்கள் தீபா, ஆஷிகா சபுராள், முத்துக்குமார் வனக்காவலர்கள் சிவா, பிரவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



