நாகர்கோவில், மே 6 –
நாகர்கோவில், பெரியவிளை பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (57). கொத்தனார். சம்பவத்தன்று இவர் தனது பைக்கை நாகர்கோவில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நிறுத்தி இருந்தார். சிறுது நேரம் கழித்து சென்று பார்த்தபோது அந்த பைக்கை காணவில்லை. இது குறித்து மாணிக்கம் வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோன்று நாகர்கோவில் ஈஸ்டாப் தெருவை சேர்ந்தவர் ஜெபர்சன் (31). எலக்ட்ரீசியன். சம்பவதினம் இவரது பைக்கை வீட்டு முன் நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்த பார்த்தபோது பைக்கை காணவில்லை. இது குறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோன்று ஆரல்வாய்மொழி, கிறிஸ்து நகர் பகுதியில் வசித்து வருபவர் சித்திரை பாண்டி (24) காய்கறி வியாபாரி. சம்பவத்தினம் இவரது வீட்டு அருகில் நிறுத்தி இருந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றதாக அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொடர்ச்சியாக நடந்த இந்த பைக் திருட்டு சம்பவங்களை தொடர்ந்து ஏஎஸ்பி லலித்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சம்பவ பகுதிகள் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் சந்தேகப்படும்படியான நபர்களை கண்டறிந்து அவர்கள் தொடர்பாக விசாரித்தனர். தற்போது இதில் தொடர்புடைய வாலிபர் ஒருவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கும்பலாக சேர்ந்து பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


