நாகர்கோவில், ஜன. 19 –
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை பொறியியல் துறைகள் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு இத்துறைகள் முக்கிய பங்காற்றி வந்தன.
வட்டாரத்திற்கு ஒரு வேளாண்மை உதவி அலுவலர் வீதம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்களில் 45 களப்பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான தொழில் நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகள், செயல் விளக்கங்கள், இடு பொருட்கள் விநியோகம், மானியத் திட்டங்கள் போன்றவை விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி கிடைத்து வந்தன. தற்போது அரசால் போடப்பட்டுள்ள பணியிட மாறுதல் உத்தரவால், வேளாண்மைத் துறையிலிருந்து 32 களப்பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டு பணியிடக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் இதுவரை எளிதில் பொற்று வந்த தொழில் நுட்ப ஆலோசனைகள், விதைகள், உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் போன்ற இடு பொருட்கள், மானியத் திட்டங்கள், பயிற்சிகள், வெளி மாநில, உள் மாநில, வெளி மாவட்ட, உள் மாவட்ட பயிற்சிகள் ஆகியவற்றை பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதுடன், இதனால் விவசாய உற்பத்தி மற்றும் தரம் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பணியிடக் குறைப்பு நடவடிக்கையினை அரசு கைவிட்டு, வெளி மாவட்டங்களுக்கு பணிப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ள பணியிடங்களை உடனடியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மீண்டும் ஒதுக்கீடு செய்து, விவசாயிகளுக்கும், வேளாண் துறைக்கும் பயன் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கையினை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.



