நாகர்கோவில், மார்ச் 18 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்பது குறித்து, பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக மாவட்டத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் முதல் வாக்காளர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து கலெக்டர் கூறுகையில்: கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை, 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுமார் 15 லட்சத்து16 ஆயிரத்து 580க்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளார்கள். அவர்களில் 18 வயது முதல் 19 வயது வரையிலான சுமார் 32,949 முதல் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அந்தவகையில் 24 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 10 சதவீதற்கு அதிகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் வாக்காளர்களாகிய நீங்கள் உங்களுடைய ஜனநாயக கடமையினை ஆற்றுவதோடு மட்டுமல்லாமல், வாக்களிப்பதில் பெருமை கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக இருப்பது போல் வாக்களிப்பதிலும் முதன்மை மாவட்டமாக திகழ வேண்டும். இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாணவ மாணவியர்களுடன் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டதோடு, பேச்சுப்போட்டிக்கான தலைப்புகளை அறிமுகப்படுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், தேர்தல் வட்டாட்சியர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



