நாகர்கோவில், ஜூன் 22 –
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த மழை மற்றும் கடல்சீற்றம் காரணமாக கணபதிபுரம் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட அழிக்கால், பிள்ளைத்தோப்பு கடலோர கிராமத்தில் தெருக்கள் மற்றும் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. கடல் நீர் உட்புகுந்ததால் கடலோர மீனவ மக்கள் பாதிப்புக்கு உள்ளனார்கள்.
இதையடுத்து தற்போது துவரங்குளம், வட்டகிளைபத்து மறுகால்ஓடை மற்றும் ஆலங்கால் ஓடைகள் உள்ளிட்டவைகள் தூர்வாரப்பட்டு, ஓடைகள் வழியாக மழைநீர் கடற்கரை பகுதிக்கு செல்லும் வகையில் பொழிமுகம் பகுதியில் உள்ள மணல் திட்டைகளை ஜே.சி.பி வாயிலாக அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று அந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: கடல் நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகால் ஓடை மற்றும் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரோட்டம் தடையின்றி செல்ல நீர்வளத்துறை செயற்பொறியாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, பலவீனமாக உள்ள தடுப்புசுவர்களை பலப்படுத்தவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அழிக்கால் மற்றும் பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தில் கடல் நீர் உட்புகுதல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நீர்வளத்துறை, வருவாய்துறை, ஐ ஐ டி மெட்ராஸ் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் கோபிநாத், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் கோமதி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் தீபா, பொறியாளர்கள், பங்கு பணியாளர்கள், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



