கிருஷ்ணகிரி, ஜூலை 11 –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமாரின் உத்தரவின் பெயரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், மற்றும் முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இன்று மஸ்ஜித்கொல்லஹள்ளி, சுண்டக்காப்பட்டி, உள்ளிட்ட 8 கிராமங்களில், பொதுமக்களுக்காக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரால் நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளித்து தங்களது குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் பேசும்பொழுது, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நியாய விலை கடைகளில் தரமான அரிசி, பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட பொருட்களை ஆராய்ந்து அதில் ஏதேனும் குறை இருப்பின் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் புகார் தெரிவிக்குமாறும், அவசியம் பற்று கேட்டு பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வின்போது தனி வருவாய் ஆய்வாளர் மாதவன், நியாய விலை கடை விற்பனையாளர் தம்பிதுரை, வட்ட பொறியாளர் விக்னேஷ், சமூக நுகர்வோர் சங்க மாநில இணைச்செயலாளர் சையத் அஸ்ஹர் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



