ஈரோடு, ஜூலை 21 –
வீ தி லீடர்ஸ் அமைப்பின் தன்னார்வலர் எஸ் ஆர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடுமையான வெப்பநிலை, குறைந்த தென்மேற்கு பருவமழை, வறண்டு வரும் அணைகள், எதிர்கால குடிநீர் நெருக்கடி, சம்பா சாகுபடி குறித்த விவசாயிகளின் அச்சம்—இவை அனைத்தும் இன்று தமிழகத்தின் நிதர்சனமாக மாறியுள்ளன.
இந்தச் சூழலில், தமிழகத்திற்கு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய 21.09 டி.எம்.சி. காவிரி நீர் இன்னும் நிலுவையில் இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. இது வெறும் புள்ளிவிவரம் அல்ல. லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரமும், கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் பாதுகாப்பும் இதில் அடங்கியுள்ளன.
காவிரி மேலாண்மை ஆணையம் மாதாந்திர ஒதுக்கீட்டின்படி தமிழகத்திற்கு நீரை வழங்குமாறு கர்நாடக அரசுக்கு தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. அதற்குப் பிறகும் நீர் திறக்கப்படவில்லை என்றால், அந்த ஆணையத்தின் உத்தரவின் மதிப்பு என்ன? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க மறுக்கும் போக்கை கூட்டாட்சி அமைப்பு எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?
கர்நாடக முதலமைச்சர் எங்கள் அணைகள் நிரம்பிய பிறகே தமிழகத்திற்கு நீர் வழங்கப்படும் என்று கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்ட சட்டப்பூர்வ உரிமையை, ஒரு மாநிலம் தன்னிச்சையாக நிறுத்தி வைக்க முடியுமா? உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் விட அரசியல் அறிவிப்புகளுக்கே அதிக மதிப்பா?
அதே நேரத்தில், தமிழக அரசிடமும் சில தவிர்க்க முடியாத கேள்விகள் எழுகின்றன. தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற இதுவரை எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகள் என்ன? மத்திய அரசிடம் வலுவான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டதா? காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முன் தமிழகத்தின் உரிமை முழு வலிமையுடன் வலியுறுத்தப்பட்டதா? விவசாயிகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அரசு தயாரித்துள்ள அவசர செயல் திட்டம் என்ன? தமிழகத்தின் உரிமை நீர் என்பது அரசியல் கோசமல்ல; அது அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட உரிமை. அதை உறுதிப்படுத்துவது எந்த அரசாக இருந்தாலும் அதன் அடிப்படை அரசியல் மற்றும் சட்டப்பூர்வ பொறுப்பாகும்.
வரும் 22 ம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் முக்கியமான வாய்ப்பாகும். அந்தக் கூட்டத்தில் தமிழக அரசு வெறும் கோரிக்கை மனுவுடன் நிற்காமல், நிலுவையில் உள்ள முழு காவிரி நீரையும் பெற்றுத் தருவதற்கான உறுதியான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை வலியுறுத்த வேண்டும்.
தேவைப்பட்டால், உச்சநீதிமன்றத்தில் உடனடி சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
தமிழக விவசாயிகளின் நலனும், மக்களின் குடிநீர் பாதுகாப்பும் அரசியல் விவாதங்களின் பொருளாக அல்ல; அரசின் செயல்திறனை அளவிடும் மிக முக்கியமான அளவுகோலாகும். இந்த விவகாரத்தில் இனியும் காலதாமதம் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டிய நேரம் இது. காரணங்களைச் சொல்லும் நேரம் அல்ல; செயல்படும் நேரம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



