தருமபுரி, ஆகஸ்ட் 14 –
தருமபுரி மாவட்டம் தொப்பூரில் உள்ள ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற “மாபெரும் தமிழ் கனவு” தமிழ் மரபு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு, உயர்கல்வி மற்றும் தொழில்களுக்கான வங்கிக் கடன்கள், சுயதொழில் தொடங்குதல் போன்ற பல்வேறு கண்காட்சி அரங்குகளை ஆட்சியர் பார்வையிட்டார்.
மாபெரும் தமிழ் கனவில் நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது: தமிழ் மொழி, தமிழ் மரபு, தமிழ் பண்பாடு, தமிழ்நாட்டின் வாழ்வியல் முறைகள் அனைத்தும் தொன்மை வாய்ந்தவை. வேகம் நிறைந்த இன்றைய நவீன உலகில் தமிழ் மொழியின் சிறப்புகள் மற்றும் தமிழர்களின் மரபை தற்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்த்திட இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மரபு உள்ளிட்ட அவற்றின் தொன்மை மற்றும் பழமை குறித்து அறிந்து கொள்வது மட்டுமின்றி மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டி புத்தகங்களும் வழங்கப்படுகின்றன.
உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வோடு சுயதொழில் புரிய வழங்கப்படும் வங்கிக் கடன் உதவிகள் குறித்து வழிகாட்டுதல் வழங்க பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டன. இதுபோன்ற நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நிகழ்ச்சியில் பெரும் நற்கருத்துக்களை மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ் பண்பாட்டுக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் உணர்வுடன் மாணவ, மாணவியர் தங்களின் பங்களிப்பை வழங்கி மாபெரும் தமிழ் கனவு திட்டம் வெற்றியடைய ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென்று ஆட்சியர் பேசினார். இந்நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குனர் ராமலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



