கோவை, ஜூலை 04 –
கோவை, காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் பல்கலைக்கழகம் 33வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் கலையரங்கில் நடைபெற்றது. துணைவேந்தர் பேராசிரியர் எலைஜா பிளசிங் வரவேற்றார்.
மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் வணிகப் பிரிவுத் தலைவர் மற்றும் மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமோட்டிவ் லிமிடெட், சென்னை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.வேலுசாமி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொண்டு, சமுதாய முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் தலைவர்களாக உருவாக வேண்டும் என்று வலியுறுத்தினார். கௌரவ முனைவர் பட்டத்தைப் பெற்ற அவர், கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் பயணம் என்றும், புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.
காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமை தாங்கி தங்களின் படிப்புகளை வெற்றிகரமாக முடித்த மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, பட்டம் பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசியதாவது: இன்று உங்கள் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் ஒரு நாள். கடின உழைப்பு, விடாமுயற்சி, ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பலனாக இன்று நீங்கள் பட்டங்களைப் பெறுகிறீர்கள். காருண்யா பல்கலைக்கழகத்தில் நீங்கள் தரமான கல்வியை மட்டுமல்ல, உயர்ந்த ஒழுக்க நெறிகளையும், மனிதநேய பண்புகளையும் கற்றிருக்கிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில்,பெற்றோர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பட்டதாரியின் வெற்றிக்குப் பின்னாலும் பெற்றோரின் தியாகம் இருக்கிறது. இந்த வெற்றி உங்களுடையது மட்டுமல்ல உங்கள் பெற்றோர்களின் வெற்றியும் கூட அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களின் சமூக பொறுப்பின் வெளிப்பாட மாற்றுத்திறனாளிக்கு வீல்சேர்கள் மற்றும் மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கினர். வேந்தர் விருதுகள் லெட்டிஷியா வழங்கப்பட்டது. முன்னதாக,ஆர். வேலுசாமி அவர்களின் தலைமைத்துவத்தையும், சேவைகளையும் பாராட்டி, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.



