கன்னியாகுமரி, நவ. 1 –
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவ திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா திங்கட்கிழமை வரை 4 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. முதல் நாளான நேற்று காலையில் ஆச்சாரிய ருத்வின்யம் நிகழ்ச்சியும் மாலையில் தோஷங்கள் நீக்கும் பூஜையும், அங்குர அர்ப்பண பூஜையும் நடந்தது. முன்னதாக திருப்பதி தேவஸ்தான ஆகம ஆலோசகர் மற்றும் அர்ச்சகர்கள் திருப்பதி குடையுடன் மேளதாளம் முழங்க வரவேற்று கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
2-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) காலை 8-30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. இதையொட்டி காலை யாக சாலை பூஜை நடத்தும் திருமலை திருப்பதி தேவஸ்தான ஆகம ஆலோசகர் தலைமையிலான அர்ச்சகர்களும் திருப்பதி குடை பிடித்து மாடவீதி வழியாக கோவில் மூலஸ்தானத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் ஏழுமலையானுக்கு சூடக்கூடிய பூமாலையை கூடையில் வைத்து கோவில் அர்ச்சகர் தலைமையில் அர்ச்சகர்கள் கோவில் மூலஸ்தானத்துக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் ஆய்வாளர் லோகேஷ், கண்காணிப்பாளர் லட்சுமி பதி, சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய முன்னாள் துணைத்தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி மற்றும் அறங்காவலர்கள் மோகன்ராவ் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் 10-30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதலும் அபிஷேகமும் நடந்தது. அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது.



