மார்த்தாண்டம், மார்ச் 4 –
கருங்கல் அருகே எஸ் ஏ என் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி பல நபர்களிடம் நகையை திருப்பி தராமல் ஏமாற்றியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுக்களை அளித்திருந்தனர். அப்புகார் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
உத்தரவின்படி குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரேகா ஆர். நங்லட் மேற்பார்வையில் கருங்கல் காவல் ஆய்வாளர் விமலன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அடகு நகைகள் மோசடி வழக்கில் குற்றவாளி முள்ளங்கினா விளையை சார்ந்த சைலஸ் என்பவர் மகன் அகில் விகானோ (27) என்பவரை கருங்கல் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



