களியக்காவிளை, பிப். 21 –
களியக்காவிளை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சுமார் நூறு ஆண்டுகள் பழமையான புளிய மரம் உள்ளது. இந்த புளிய மரம் இலைகள் அனைத்தும் உதிர்த்த நிலையில் காட்சி அளிக்கிறது. புளிய மரத்தின் அடிப்பகுதி சிதிலரித்து, மரம் இத்து போய் உள்ளது. ஆகவே எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் என அப்பகுதியினர் அஞ்சுகின்றனர்.
இந்த புளிய மரத்தின் அருகில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான டிரான்ஸ்பர்மர் உள்ளது. இதில் புளிய மரம் சரிந்து விழுந்தால் விபத்து ஏற்படும். மேலும் தேசிய நெடுஞ்சாலையையொட்டி புளிய மரம் உள்ளது. ஆகவே வாகனங்கள் மீது புளிய மரம் விழுந்து விபத்தை ஏற்படுத்தலாம் எனவும் பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
மேலும் இந்த புளிய மரத்தில் அருகில் தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் கல்வி கற்க வரும் மாணவர்கள் இந்த புளிய மரத்தின் பக்கமாக நடந்து செல்கின்றனர். ஆகவே விபத்தை ஏற்படுத்த காத்து நிற்கும் பழமையான புளிய மரத்தை சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் சதீஷ் என்பவர் வலியுறுத்தியுள்ளார்.



