சென்னை, ஆகஸ்ட் 14 –
கபால முக குறைபாடுடைய 5 வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் எலும்புகளை சீரமைத்து குணமாக்கி ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனை சாதனை படைத்திருக்கிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் குழுவின் துணையுடன் கிரானியோசினாஸ்டோசிஸ் (கபாலமுக குறைபாடு) என்னும் ஒரு அரிய வகை மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து அக்குழந்தையின் எதிர்காலத்திற்கு ஒளியேற்றியிருக்கிறார்கள்.
இதற்கான செய்தியாளர் சந்திப்பில் தலை, முக சீரமைப்பு நிபுணர்கள் டாக்டர் மணிகண்டன் மற்றும் டாக்டர் ஜி. பாலமுரளி ஆகியோர் தெரிவித்ததாவது: கிரானியோசினாஸ்டோசிஸ் (கபாலமுக குறைபாடு) என்பது ஒரு அரிய வகை குறைபாடாகும். இக்குறைபாடு பிறக்கும் 2,000–2,500 குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படுகிறது. பிறந்த பிறகு மண்டை ஓட்டின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகள் மிக விரைவாக இணைந்து ஒட்டிக் கொள்வதால் இக்குறைபாடு ஏற்படுகிறது.
மண்டை ஓட்டின் இயல்பான வளர்ச்சியைத் தடுக்கும் இப்பாதிப்பு இயல்பற்ற தலை மற்றும் விகார முக வடிவமைப்பு, மூளையில் அழுத்தம் அதிகரித்தல் மற்றும் கடுமையான பாதிப்பு நேர்கையில் வளர்ச்சி தாமதங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும்.
குறிப்பாக பொருளாதார ரீதியில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு நிலை உணர்வு ரீதியான மற்றும் சமூக ரீதியிலான கடும் சங்கடங்களையும் சிரமங்களையும் பெரும் சுமையாக சுமத்துகிறது.
இது பெரும்பாலும் பள்ளி கல்வி, விளையாட்டு ஆகிய செயல்பாடுகளை பாதிக்கிறது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இதன் தாக்கம் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அவர்களின் வாழ்நாள் காலம் முழுவதும் நீடிக்கக்கூடும்.



