கன்னியாகுமரி, ஜூலை 10 –
கன்னியாகுமரி காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடைபெற்றது. கன்னியாகுமரி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்வேலன் வரவேற்றார். கன்னியாகுமரி டிஎஸ்பி பிரகாஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட எஸ்பி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது: கன்னியாகுமரி காவல்துறை விபத்தில்லா குமரி என்ற இலக்கை அடைய பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். அதற்கு காவல்துறை மட்டுமல்ல உங்களை போன்ற தன்னார்வலர்களின் பங்கும் அவசியம். பொதுவாக ரோட்டில் ஜல்லி சிதறி கிடக்கும். அதை நாம் எளிதில் கடந்த சென்றுவிடுவோம். ஆனால் ஒரு பைக் அதில் விழுந்து பைக்கில் செல்பவர்கள் காயமடையும் நிலை ஏற்படும். அதை தன்னார்வலர்கள் சரிசெய்ய வேண்டும்.
முக்கியமாக பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டில் ரிப்ரௌக்டர் ஸ்டிக்கர் நிறம் மங்கிவிட்டது. அதை தன்னார்வலர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து சரி செய்வது, போக்குவரத்து ஒழுங்கு படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கல்லூரி மாணவர்கள், ஓட்டுநர்கள் என சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு குழுக்கள் தொடங்கபட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய இரண்டு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இனி தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் ஆகிய மூன்று இடங்களில் இது போன்ற தன்னார்வலர்கள் குழு தொடங்கப்படும். சாலை அனைவருக்கும் பொதுவானது. மாவட்டத்தில் ஆண்டுக்கு 300 சாலை விபத்து நடக்கிறது. இதில் பலர் உயிரிழக்கின்றனர். 300 விபத்து ஏற்படும் போது அந்த விபத்தால் 300 குடும்பம் பாதிக்கப்படுகிறது. நிறைய அபராதம் போடுவதால் விபத்தை குறைக்க முடியாது.
விபத்து குறைய வேண்டும் என்றால் நாம் ஒவ்வொருவருக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வேண்டும். அதற்கு காவல்துறையோடு நீங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் இணைந்து வேலை செய்தால் விபத்துக்களை குறைக்க முடியும். கிராமங்கள் தோறும் சிசிடிவி கேமரா திட்டத்தின் மூலம் குமரி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 800 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் சாலையோர நடைபாதையில் வாகனங்கள் பார்கிங் செய்வதால் விபத்து நடக்கிறது. அதேபோல் நீங்கள் செய்யும் வேலையில் ஏதாவது ஒரு குடும்பம் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டால் அதுதான் திருப்தி. தற்போது ஏஐ கேமரா மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. எங்களது நோக்கம் அபராதம் போடுவது கிடையாது. விபத்துகள் குறைந்த விபத்தில்லா குமரி என்ற இலக்கை நோக்கி காவல்துறை செல்கிறது. அதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும் என பேசினார்.
போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சுமித் ஆல்ட்டின் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.



