கருங்கல், அக். 6 –
கருங்கல் அருகே உள்ள சுண்ட விளை பகுதியை சேர்ந்தவர் ஹென்றி மனைவி ஜோஸ்பின் லதா (54). இவர் நேற்று முன்தினம் தனது மருமகள் மற்றும் உறவினர் ஒருவருடன் பழைய தங்க நகைகள் கொடுத்துவிட்டு புதிய நகைகள் எடுப்பதற்காக நாகர்கோவில் சென்றார். பின்னர் நகைகளை வாங்கிக்கொண்டு அங்குள்ள ஒரு ஜவுளிக்கடையில் சென்று புதிய துணிகள் எடுத்தனர்.
இரவு ஒன்பது மணியளவில் நாகர்கோவில் இருந்து பஸ்ஸில் ஏறி கருங்கல் சென்ற வந்தடைந்தனர். கருங்கல் பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது ஜோஸ்பின் லதா பையில் இருந்த மணிபர்சும், 5 பவுன் தங்க நகையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து கருங்கல் காவல் நிலையத்தில் உடன் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் இருந்து பஸ் ஏறும்போது நகைகள் இருந்ததாக கூறியுள்ளார். எனவே பஸ்ஸில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகைகளை திருடி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


