நாகர்கோவில், பிப். 6 –
நாகர்கோவில் அடுத்த இறச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் சுபின் (30). வெல்டர். கலுங்கடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (28) . இவர்கள் இருவரும் நேற்று இரவு இறச்சகுளம் அருகே பைக்கில் செல்லும் போது அந்த வழியாக சென்ற வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பூதப்பாண்டி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இரண்டு பேர் பலியான சம்பவத்திற்கு காரணமான வாகனத்தை கண்டுபிடிக்க ஏஎஸ்பி லலித்குமார் மேற்பார்வையில் இரண்டு தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் நாகர்கோவில் முதல் பூதப்பாண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தபோது ஒரு டெம்போ வேகமாக செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. சுபின், கார்த்திக் செல்லும் பைக்கை முந்தி செல்ல அந்த டெம்போ முயன்ற போது இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிய வந்துள்ளது.
மேலும் வாகனம் சென்ற பாதையில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தபோது அது செங்கல் லோடு ஏற்றி சென்ற வாகனம் என்றும் தெரிய வந்துள்ளது. எனவே செங்கல் சூளைகளில் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


