கன்னியாகுமரி, ஜன. 20 –
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலை அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். மேலும் இந்த காலங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, பொங்கல் பண்டிகை என தொடர் விடுமுறையும் வருவதால் இந்த 3 மாத காலமும் சீசன் காலமாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த நவம்பர் மாதம்17-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரி வந்து சென்றனர். வழக்கமான சுற்றுலா பயணிகளும் வந்து சென்றதால் கன்னியாகுமரியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சீசன் களைகட்டி காணப்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
தற்போது விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்ததாலும், சபரிமலை நடை சாத்தப்பட்டதாலும் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. இதனால் 65 நாட்கள் நீடித்த சீசன் இன்றுடன் முடிவடைந்தது. சீசன் முடிவடைந்ததால் கடற்கரை மற்றும் வீதிகள் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.


