நாகர்கோவில், பிப். 9 –
குமரி மாவட்டத்தை விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்கவும், அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இருந்தும் தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீதும், மது போதையில் வாகனம் ஓட்டுவோர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
எனவே நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு ஆய்வாளர் பேச்சுமுத்து தனது தலைமையிலான போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாரை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று சென்னைக்கு சென்று கொண்டிருந்தது.
இந்தப் பேருந்தில் மார்த்தாண்டம் மற்றும் நாகர்கோவிலில் இருந்து சுமார் 18-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரி பகுதியில் வந்ததபோது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் பேருந்து ஓட்டுனர் மது போதையில் இருந்ததை கண்டுபிடித்தனர்.
உதவி ஆய்வாளர் மது போதையில் இருந்த ஓட்டுநர் தொடர்ந்து சென்னையை நோக்கி பேருந்து ஓட்டுவது சரியில்லை, அது பயணிகளுக்கும் பாதுகாப்பானதாக இருக்காது என கூறி மாற்று ஓட்டுநர் வந்தால் மட்டுமே பயணிகளை தொடர்ந்து இந்த பேருந்தில் செல்ல அனுமதிப்பேன். அவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது என தெரிவித்தது மட்டுமல்லாமல், தனியார் பேருந்துகள் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு அதன் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் ஆகியோர் மது போதையில் உள்ளனரா என பரிசோதித்து அதன் பின்னரே பேருந்தை இயக்க அவர்கள் பணியாற்றும் நிறுவனம் அனுமதிக்க வேண்டும்.
ஆனால் தனியார் பேருந்து நிறுவனங்கள் இதனை முற்றிலுமாக கடைபிடிக்காததின் விளைவுதான் ஓட்டுநர்கள் மதுபோதையில் இருப்பதற்கு காரணம் என தெரிவித்த அவர் போதை ஓட்டுனருக்கு ரூபாய் 15,000 அபராதம் விதித்தும், அவரின் ஓட்டுநர் உரிமத்தை இடை நிறுத்தம் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து போதை ஓட்டுனருக்கு பதிலாக வேறு ஓட்டுனரை வரவழைத்து பேருந்தை கொண்டு செல்லுமாறு கூறினார். ஆனால் மது போதையில் இருந்த ஓட்டுநர் மாற்று ஓட்டுனரை வரவழைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் பேருந்திலேயே அமர்ந்து இருந்தனர். மேலும் ஓட்டுநர் மது அருந்தி பேருந்தை ஓட்டி வந்தார் என அறிந்த பயணிகள் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வேறு ஓட்டுனர் வந்தால் தான் பேருந்தில் ஏறுவோம் என தெரிவித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வார விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி பயணிகளை ஏற்றி செல்லும் பேருந்து ஓட்டுநர்கள் மது போதையில் வாகனம் ஓட்டுகின்றனரா என போக்குவரத்து காவல்துறையினர் பேருந்து ஓட்டுநர்களை பிரீத் அனலைசர் மூலம் சோதனை செய்து மது போதையில் இருப்பதை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுத்து 18க்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின் மற்றும் காவலர்களின் சிறப்பான பணி பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



