ஈரோடு, மே 7 –
ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரிக்கிறது. அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் கொளுத்தியது. இப்போது அக்னி வெயில் கொளுத்துவதால் வெயிலின் தாக்கம் போக போக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிக்னல் பகுதியில் நிற்கும் போது இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சாலையை கடப்பவர்கள் வெயிலில் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
இதையடுத்து ஈரோடு கலெக்டர் அலுவலகம் சிக்னல் சூரம்பட்டி நால் ரோடு சிக்னல் போன்ற இடங்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பச்சை சிக்னல் விழும் வரை பசுமை பந்தலில் நிழலில் நின்று செல்கிறார்கள்.
இதேபோல் ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சிக்னலிலும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்காக பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். மேலும் ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என்று இரு சக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


