ஈரோடு, ஜூன் 25 –
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. “போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்து எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்று ஆட்சியர் உறுதி மொழி வாசித்தார்.
இதை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியையொட்டி 15 குழந்தைகள் இல்லம் சார்பில் மாணவ மாணவியர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கருத்துக்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது இதில் முதல் 3 இடங்களை பெற்ற 3 குழந்தைகள் இல்லம் மாணவ, மாணவியர்களுக்கு கோப்பை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும், பேருந்து நிலைய காவல் அலுவலர்கள். இரயில் நிலைய காவல் அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், சிங்கப்பெண் அதிரடிப்படையினர். ஆகியோர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியமைக்காக பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, அலுவலக மேலாளர் (கலால்) வீரலட்சுமி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஒருங்கிணைப்பாளர் கமலவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



