நாகர்கோவில், ஜூன் 9 –
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நவீன தொழில்நுட்பத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படும் காவல் ஏ ஐ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பில், சாலைகளின் நான்கு திசைகளிலும் ஏ ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவைகள் போக்குவரத்து விதிமீறல்களை தானாகவே கண்டறியும் திறன் கொண்டவை. விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்கள் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் மானிட்டரில் உடனுக்குடன் காட்சிப்படுத்தப்படும். மேலும், விதிமீறலின் தன்மைக்கேற்ப அபராத நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டம் சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இணைந்து மேற்கொண்டுள்ள புதுமையான கூட்டு முயற்சியின் மூலம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பாக இந்த ஏஐ செயலியை வடிவமைத்த சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்களை சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
இந்த முயற்சி மூலம் போக்குவரத்து விதிமீறல்களை குறைத்து, விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுப்பதுடன், பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன், போக்குவரத்து ஆய்வாளர் அருண், உதவி ஆய்வாளர் அசோக் மற்றும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



