ஈரோடு, மே 19 –
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்படும் மழை, வெள்ளம் போன்ற இயற்கை இன்னல்களை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு வட்டார அளவில் முன்னெச்சரிக்கை குழு, தேடுதல் மீட்பு குழு, நிவாரண முகாம் மேலாண்மைக் குழு சிறப்பு குழு அமைத்து பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கால்வாய்கள் அதன்படி, நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள், வடிகால்கள் ஆகியவற்றில் தூர்வாரி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, காவல் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மாதிரி பயிற்சிகளை நடத்துதல் வேண்டும்.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இயற்கை பேரிடர் காலங்களில் செயல்படுவதற்காக மருத்துவமனை பாதுகாப்பு செயல்திட்டம் அமைக்கவேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்குதல் மற்றும் மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்துதல் வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களில் அத்தியாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தென்மேற்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பாக உடனுக்குடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கிவரும் தொலைபேசிஎண்: 1077, 0424-2260211-ல் தெரிவிக்க வேண்டும். வருவாய் கோட்டம் மற்றும் வட்ட அலுவலகங்களில் 24×7 இயங்குமாறு கட்டுப்பாட்டு அறை அமைத்து அலுவலர்களுக்கு முறைப் பணி வழங்கவேண்டும். மழை அளவு மற்றும் சேத விபரங்களை ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்குள் 1077 என்ற எண்ணிற்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும், மழைமானி நிலையங்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் தணிக்கை செய்து மழைமானிகள் நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டும். தன்னார்வலர்கள் மற்றும் பேரிடர் கால காவலர்கள் முதல் நிலை மீட்பாளர்கள் தங்களது பகுதியில் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல்களை தெரிவிக்க ஏதுவாக வட்டாட்சியரின் தொடர்பு எண்களை அவர்களிடத்தில் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறினார்.



