நாகர்கோவில், ஏப். 15 –
நாகர்கோவில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எம் ஆர் காந்தி எம்எல்ஏ இன்று காலை வடசேரி காய்கறி சந்தை, அண்ணா சிலை சந்திப்பு, பஸ் நிலையப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் பாரதிய ஜனதா வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கையை காட்டி எம் ஆர் காந்தி எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெற்றால் மகளிருக்கு ரூ2000 உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டுக்கு தலா ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். தைப்பூச விழா மாநில விழாவாக கொண்டாடப்படும். ஒரு முறை அனைத்து குடும்பத்திற்கும் ரூ.10,000 நிதி வழங்கப்படும் என்பது போன்ற போன்ற திட்டங்களை செயல்படுத்துவோம்.
நாகர்கோவில் மாநகரின் வளர்ச்சிக்கான திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பப்படும். நாகர்கோவிலில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைகளுக்கு முழு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது புத்தன்அணை திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஆனாலும் மாநகரம் முழுவதும் தற்போது குடிநீர் பிரச்சினை உள்ளதால், பல பகுதியில் குடிநீர் சரியாக கிடைக்கவில்லை என்கிறார்கள்.
எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் நாகர்கோவில் மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் கொண்டு வரப்படும். நாகர்கோவிலில் மீண்டும் பாரதிய ஜனதா தான் வெற்றி பெறும் என்று கூறினார். இந்த பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதா அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.



