நாகர்கோவில், ஜூலை 14 –
திருநெல்வேலியிலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டு வந்த இன்டர்சிட்டி தினசரி ரயில், குமரி மாவட்ட மக்களின் நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி முதல் நாகர்கோவில் டவுண் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டது. அப்போதைய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதற்கு முக்கிய பங்கு வகித்தார்.
இந்த ரயில் திருவனந்தபுரத்திற்கு நீட்டிக்கப்பட்ட போது நாகர்கோவில் டவுண் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களில் மட்டுமே நிறுத்தம் அனுமதிக்கப்பட்டது. ஆனால், முக்கிய சந்திப்பான இரணியல் ரயில் நிலையத்திற்கு தற்காலிக நிறுத்தம் கூட வழங்கப்படவில்லை. இரணியலில் இருந்து நாகர்கோவில் 18 கி.மீ தொலைவிலும், குழித்துறை 15 கி.மீ தொலைவிலும் உள்ளன.
முன்பு இந்த ரயில் இயங்கும் 456 கி.மீ தூரத்தில், திருச்சி முதல் மதுரை வரையிலான 156 கி.மீ மட்டுமே இருவழிப்பாதையாக இருந்தது. மீதமுள்ள 300 கி.மீ ஒற்றை வழிப்பாதை என்பதால், ‘கிராசிங்’ காரணங்களுக்காகப் பல்வேறு நிலையங்களில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் புதிய நிறுத்தங்கள் வழங்கினால் ‘சூப்பர்பாஸ்ட்’ அந்தஸ்து பறிபோய்விடும் என ரயில்வே துறை மறுத்து வந்தது.
ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. இரணியல் முதல் திருவனந்தபுரம் வரையிலான 52 கி.மீ தூரத்தைத் தவிர, மீதமுள்ள 404 கி.மீ தூரமும் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுவிட்டது. தற்போது இந்த ரயில் முதல் ‘கிராசிங்’-காக இரணியல் ரயில் நிலையத்திலேயே நின்று செல்கிறது. அவ்வாறு நின்று செல்லும் போது, அங்கு பயணிகளை ஏற்றி இறக்க அனுமதித்தால் ரயில்வே துறைக்குக் கூடுதல் வருவாய் மட்டுமே கிடைக்கும்.
கன்னியாகுமரி மாவட்டம் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதி என்பதால், நிலையங்களுக்கு இடைப்பட்ட தூரத்தைக் கணக்கில் கொள்ளக் கூடாது எனப் பயணிகள் சங்கத்தினர் கூறுகின்றனர். இரணியல் ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தில் வருவாய் அடிப்படையில் 27-வது இடத்தில் உள்ளது.
இரணியல் ரயில் நிலையத்தின் தற்போதைய ஆண்டு வருவாய் சுமார் 4.97 கோடி ரூபாய். ஆண்டு பயணிகள் எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 405 ஆகும். தினசரி வருவாய் ரூ1 லட்சத்து 36 ஆயிரத்து 375 ஆகும். தினசரி பயணிகள் எண்ணிக்கை:1,127 ;நின்று செல்லும் ரயில்கள் 24 ஆகும்.
“மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது” என்ற பழமொழிக்கு ஏற்ப, வெறும் மனுக்கள் கொடுப்பதோ அல்லது நாடாளுமன்றத்தில் பேசுவதோ மட்டும் குமரி மாவட்ட ரயில்வே வளர்ச்சிக்கு உதவாது. அண்டை மாநிலமான கேரளாவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ரயில்வே வாரிய அதிகாரிகளைச் நேரில் சந்தித்து, தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடிச் சாதிக்கிறார்கள். அதேபோன்றதொரு தீவிரமான அழுத்தத்தையும், அதிரடி நடவடிக்கைகளையும் குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் எடுத்தால் மட்டுமே இன்டர்சிட்டி ரயிலுக்கான இரணியல் நிறுத்தம் சாத்தியமாகும் என கல்குளம் தாலுகா பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


