போகலூர், நவ. 14 –
தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளார். இதற்கு ஆசிரியர் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பினர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பார் முருகேசன் கூறியதாவது; ஒன்றிய அரசில் பணிபுரியும் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு கடந்த மாதம் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்து இருப்பது ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை, புதிய ஆட்சி ஏற்பட்ட பிறகு எங்களுக்கு தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு கிடைத்து வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜுலை அரையாண்டிற்கான 3 சதவீதம் அகவிலைப்படியானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம்.
தமிழக அரசு அறிவித்துள்ள 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வால், 16 லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் போன்றோர் பயனடைய உள்ளனர். ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



