திருவட்டறு, ஜூலை 1 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் இந்தியாவில் உள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலைச் சுற்றி மிகப்பழமையான சிற்பங்கள் சிலைகள் காணப்படுகிறது. உதயமார்த்தாண்ட மண்டபத்தின் எதிரில் ரதி, மன்மதன் சிலைகள் காணப்படுகிறது. கோவில் ஸ்ரீபலி மண்டபத்தில் வேணுகோபாலன், மத்தளம் கொட்டும் ஆண், சதுர் தாண்டவ நிலையில் மத்தளம் அடிக்கும் பெண், யாளி உட்பட பல சிற்பங்கள் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவிலில் உள்ள ஸ்ரீபலிமண்டபத்தில் உள்ள 10 அடி உயர, ஐந்தரை அடி அகலம் கொண்ட யாளி சிலையின் துதிக்கை மற்றும் கீழ்பகுதியில் உள்ள பூதகணத்தின் சிற்பம் ஆகியன உடைந்து விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல மாநில வல்லுநர் குழுவினர் கோவிலுக்கு வந்து உடைந்த சிலையை பழமை மாறாமல் புதுப்பிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு சிலையை சீரமைக்க தீர்மானித்தனர்.
பின்னர் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜான்சி ராணியின் உத்தரவுப்படி அறநிலையத்துறை பொறியாளர் ராஜ்குமார், கோவில் மேலாளர் மோகன்குமார் முன்னிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மண்டல தொல்லியல் வல்லுநர் மணி தலைமையில் ஸ்தபதிகள் கன்னியப்பன், கமலக்கண்ணன் மற்றும் குழுவினர் கடந்த 3 நாட்களாக யாளி சிலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக கூட்டு கலவைகள் பயனபடுத்தப்பட்டது. தற்போது தற்போது யாளி சிலை உடைவதற்கு முன்பிருந்தது போல் தத்ரூபமாக காட்சி தருகிறது. சிலையை பழமை மாறாமல் சீரமைத்த அறநிலையத்துறைக்கு பக்தர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.



