மார்த்தாண்டம், ஜூலை 31 –
மார்த்தாண்டத்தை அடுத்த கடையால் என்ற பகுதியை சேர்ந்த 28 வயது பெண் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவர் ஏவியேசன் பிரிவில் டிப்ளமோ படித்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண் களியல் அருகே அரகநாடு பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த அருண் (30) என்பவருடன் இளம் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர்.
இதை அடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி இளம்பெண்ணை அருண் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு திருமண ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை அருண் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் 2024ம் ஆண்டு இளம்பெண்ணை மீண்டும் தொடர்பு கொண்டு கன்னியாகுமரியில் ஒரு வேலை பார்த்து இருப்பதாகவும் அதற்கு நடக்க உள்ள நேர்காணலுக்கு கலந்து கொள்ள வருமாறு அழைத்துள்ளார். அந்தப் பெண் செல்ல மறுத்துள்ளார்.
உடனே அருண் அந்தப் பெண் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் தன்னிடம் இருக்கிறது கூறி மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்தப் பெண் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். அங்கு விடுதியில் வைத்து இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் வீடியோக்களை வைத்து மிரட்டி தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றதுடன், பல்வேறு நேரங்களில் ரூபாய் 5 லட்சம் மற்றும் 6 கிராம் தங்க நகை ஆகியவற்றையும் வாங்கி ஏமாற்றி உள்ளார்.
இதனால் விரத்தி அடைந்த இளம்பெண் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் அருண் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அருண் மீது வழக்கு பதிவு செய்தனர். அருண் தற்போது தலைமறைவு ஆகிவிட்டார். தொடர்ந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


