சென்னை, ஜூன் 16 –
தமிழகத்தில் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம், கடந்த 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 144 கிளைகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் சென்னை பன்னாட்டு விமான முனையத்தில் கோ ஆப்டெக்ஸ் கிளை திறக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சென்னை அமைந்தகரை ஸ்கைவாக் மாலில் அமைச்சர் விஜய் பாலாஜி கோ ஆப்டெக்ஸ் கிளையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கைத்தறித் துறை முதன்மை செயலர் வெங்கடேஷ் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, கோ-ஆப் டெக்ஸ் அதிகாரிகள் கூறும் போது, “கோ-ஆப்டெக்ஸ் புதிய ரகங்களான மகளிர் ஆயத்த ஆடை ரகங்கள், இன்டிகோ மற்றும் நவீன அச்சிடல் ஆடை தொகுப்புகள், டிஜிட்டல் முறையில் அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள். மூங்கில் இழை மற்றும் இருவண்ண பூத்துண்டு ரகங்கள் ஆகியவை விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில்லறை விற்பனை குறியீடாக ரூ.100 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றனர்.



