நாகர்கோவில், ஏப். 20 –
நாகர்கோவில் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எம். ஆர். காந்தி, இன்று முக்கிய பிரமுகர் இல்லங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். இன்று மாலையிலும் ஆட்டோக்களில் தெருக்களுக்கு சென்றும், முக்கிய வீதிகளிலும் அவர் வாக்கு சேகரித்தார். பாரதிய ஜனதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை சுட் டிக்காட்டி பேசி, எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெற்றால் மகளிருக்கு ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டுக்கு தலா ஒரு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். தைப்பூச விழா மாநில விழாவாக கொண்டாடப்படும். ஒருமுறை அனைத்து குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்படும் போன்ற திட்டங்களை செயல்படுத்துவோம். நாகர்கோவில் மாநகரின் வளர்ச்சிக்கான திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படும்.
நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது புத்தன் அணை திட்டத்தின் தண்ணீர் கொடுக்கிறார்கள். ஆனாலும் மாநகரம் முழுவதும் தற்போது குடிநீர் பிரச்சினை உள்ளது. பல பகுதிகளில் குடிநீர் சரியாக வரவில்லை என்கிறார்கள். எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால், குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை தீர்க்கப்படும். எனவே தாமரை சின்னத்துக்கு வாக்குகளை தாருங்கள் என்றார்.
முன்னதாக எம்.ஆர்.காந்தி கூறுகையில், அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் பாரதிய ஜனதாவுக்கு உள்ளது. எனவே இந்த முறையும் நாகர்கோவில் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவோம் என்றார். எம். ஆர்.காந்திக்கு ஆதரவாக அவரது கட்சியினரும் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



