நாகர்கோவில், நவ.14-
நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றம் இன்று நடந்தது. இதில் ஆலயபங்கு மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். விழா வருகிற 23-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி ஆலய வளாகம் முழுவதும் வண்ண அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
முதல் நாளான இன்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை நடைபெற்றது. இரவு 7.15 மணிக்கு தேவசகாயம் மவுண்ட் வட்டார முதல்வர் எம்.சி. ராஜன் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார். முளகுமூடு வட்டார முதல்வர் டேவிட் மைக்கேல் மறையுரையாற்றினார்.
விழாவில் பங்கு அருள்பணியாளர் டோனி ஜெரோம், இணை பங்கு அருட் பணியாளர் ருடால்ப் சங்கித், பங்குபேரவை துணை தலைவர் ஜாய் இர்வின் ஜீயோ நேவிஸ், செயலாளர் மரிய ஜாண் சேவியர், பொருளாளர் பெர்லின் சேவியர், துணை செயலாளர் கிறிஸ்டின் ராணி, அருட்சகோதரிகள், பங்குமக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 23-ந் தேதி காலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருமுழுக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு சிறப்பு ஆராதனை போன்றவை நடைபெறும். மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலியை தொடர்ந்து கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.



