வேலூர், டிச. 19 –
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை குடியாத்தம் சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாபு என்பவர் துரித உணவகத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், 17-12-2025 அன்று இரவு வழக்கம் போல் உணவகத்தில் பொதுமக்கள் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
இரவு சுமார் 10 மணியளவில் பள்ளிகொண்டா அமானி நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மகன் மனோஜ் (24) தனது நண்பருடன் உணவகத்திற்கு வந்துள்ளார். அவர் முட்டையுடன் 2 நூடுல்ஸ் மற்றும் 2 சிக்கன் ரைஸ் வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து, உணவக ஊழியர்கள் கேட்ட உணவை பார்சலாக தயார் செய்து வழங்கினர்.
ஆனால், கூடுதலாக முட்டைகளை சேர்த்து கொடுக்க வேண்டும் என மனோஜ் மற்றும் அவரது நண்பர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் கேட்டபடி உணவை மீண்டும் தயாரித்து வழங்கியுள்ளனர். அதன் பின்னர் உணவிற்கான பணத்தை உணவக உரிமையாளர் பாபு கேட்ட போது, மனோஜ் “நான் யார் என்று தெரியுமா? என் அம்மா எஸ்ஐயாக வேலை செய்கிறார். என்னிடமே நீ பணம் கேட்கிறாயா?” என தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மனோஜ் உணவக உரிமையாளர் பாபுவை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் கடையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையை எடுத்து அடிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த கடை ஊழியர்கள் மனோஜை தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் போலீசார் முன்னிலையிலேயே மனோஜ் மீண்டும் உணவக உரிமையாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் மனோஜை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். இருப்பினும் அவர் குடிபோதையில் இருந்ததால், அவரை அங்கிருந்து அனுப்பி வைத்து, அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இதற்கிடையில், உணவகத்தில் நடந்த இந்த ரகளை சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று உணவக உரிமையாளர் பாபு போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் புகாரை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு வாங்கி கொண்டு பணம் தர மறுத்து, பெண் எஸ்ஐயின் மகன் குடிபோதையில் உணவகத்தில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பள்ளிகொண்டா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



