கன்னியாகுமரி டிச 11
சுனாமியால் பாதிக்கப்பட்டவருக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட வீட்டை ஆக்கிரமிப்பு செய்தவா்களிடமிருந்து 2 மாதங்களில் கன்னியாகுமரி காவல் ஆய்வாளா் மீட்டு, சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சோ்ந்த கலா என்ற ஆரோக்கியமேரி தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி அருகே கடந்த 2004 -ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில், நான் வசித்த கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வீடுகளை இழந்த 200 குடும்பத்தினருக்கு அரசு வீடு கட்டிக் கொடுத்தது. எனது குடும்பத்தினருக்கும் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது.
இந்த வீட்டுக்கான மின் இணைப்பு எனது கணவா் பெயரில் பெற்று, முறையாக வரி செலுத்தி வந்தோம். எனது கணவருக்கும் எனக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக பெற்றோா் வீட்டுக்கு சென்று விட்டேன். எனது கணவா் கடந்த 2022-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, நான் ஏற்கெனவே கணவருடன் வசித்த வீட்டுக்கு சென்றேன். வீட்டை தனிநபா்கள் சிலா் ஆக்கிரமித்து இருந்தனா். இது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். ஆனால், நடவடிக்கை இல்லை. எனவே, வீட்டை மீட்டு என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரருக்கு ஒதுக்கிய வீட்டை விற்கவோ, வாங்கவோ முடியாது. அந்த வீட்டில் மனுதாரருக்குப் பிறகு, அவரது குழந்தைகள் மட்டுமே வசிக்க முடியும். மனுதாரரின் புகாா் மனுவை போலீஸாா் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் புகாா் மனுவை கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளா் விசாரித்து, 2 மாதங்களில் சம்பந்தப்பட்டோரிடம் வீடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.