நாகர்கோவில், செப்- 26
குமரி மாவட்டத்தில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் கனிமவளப் பொருட்கள் ஏராளமாக குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்படுவதால் சாலைகள் விரைவில் பழுதடைதல், அதிக வித்துக்கள், உயிரிழப்புகள் ஏற்படுதல், போக்குவரத்து நெரிசல் போன்றவை பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருகிறது.
இதை தடுக்க அனைத்து கட்சிகள் சார்பில் கனிம வள கடத்தல் தடுப்பு இயக்கம் மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் இயக்கம் துவக்கப்பட்டது.
இயக்கத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் கருங்கலில் நேற்று (24-ம் தேதி) மாலையில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பட் , குமரி மேற்கு மாவட்ட திமுக அவை தலைவர் மரிய சசிகுமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர் பினுலால் சிங் மற்றும் மாக்சிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதற்கட்டமாக கலெக்டரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்த கோரிக்கை வலியுறுத்தி அக்டோர் 5 ம் தேதி புதுக்கடை சந்திப்புகளில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.