ராமநாதபுரம், ஆக. 12 –
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தண்டையார்பேட்டை கோபால் நகரில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை காணொளி காட்சியின் வாயிலாக துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வெண்ணீர்வாய்க்கால் ஊராட்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்ததையொட்டி வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் ஆகியோர் துவக்கி வைத்தனர். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் வாகனத்தை வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
வெண்ணீர்வாய்க்கால் ஊராட்சியில் பயன்பெறும் வகையில் பயனாளிகள் வீடுகளுக்கு சென்று வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் உணவுப் பொருட்கள் வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் இன்று முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நியாய விலை கடையிலிருந்து உணவுப் பொருட்கள் நேரடியாக அவர்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படுவதால் இத்திட்டம் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 23,191 குடும்ப அட்டைகளில் 31,289 பயனாளிகள் இத்திட்டம் மூலம் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். இத்திட்டத்தை பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் ஜூனு, பரமக்குடி கோட்டாட்சியர் சரவண பெருமாள், கூட்டுறவு சங்க மண்டல துணை பதிவாளர் ராஜகுரு, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமாறன், முதுகுளத்தூர் தாசில்தார் கோபிநாத் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



