திருப்பூர், டிசம்பர் 12 –
காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தனித்தனி கருத்துகள் இருந்தாலும் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்போம்!! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க நிறைந்த DGP யை தமிழக அரசு பணியமர்த்த வேண்டும். திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கோபிநாத் பழனியப்பன் பேட்டி.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சியானது தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிமிருந்து விருப்ப மனுக்கள் பெறுவதை இன்று முதல் தொடங்கியுள்ளது.
இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி பார்க் சாலையில் உள்ள INTUC அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேசிய செயலாளரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவருமான கோபிநாத் கட்சி நிர்வாகிகளுக்கு விருப்ப மனுக்களுக்கான விண்ணப்பங்களை வழங்கினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இன்று முதல் விருப்ப மனுக்களை பெறுவதாகவும் வருகிற 31-ந் தேதி வரை இந்த மனுக்கள் பெறப்படும். மாவட்ட அலுவலகங்கள் மட்டுமல்லாது சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கும் சென்று விண்ணப்பங்களை கொடுக்கலாம். காங்கிரஸ் சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி எத்தனை தொகுதிகளை பெறுவது என்று முடிவு செய்வார்கள். த.வெ.க. கழகத்துடன் கூட்டணி என்று சமூக வலைதளங்களில்தான் அதிக அளவில் செய்திகள் வருகிறது.
காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தனித்தனி கருத்துகள் இருந்தாலும் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்போம். மேலும் நாடாளுமன்றத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறார். அவர்கள் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு திருட்டினை பயன்படுத்தி தான் கடந்த முறை எல்லாம் வெற்றி பெற்றுள்ளனர்.
அதே போல தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகள் மூலம் 1 கோடி வாக்குகளை நீக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் வாக்காளர்கள் பலர் இன்னும் தங்களது படிவங்களை வழங்கவில்லை. எனவே திருத்தப் பணிக்கான காலத்தை மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்க வேண்டும். தற்பொழுது உள்ள தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செய்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், தேர்தல் நேரம் நெருங்கி வருவதால் சட்டம் ஒழுங்கை சீரமைத்திட தற்காலிக டி.ஜி.பி யை மாற்றி விட்டு நிரந்தர டி.ஜி.பி.யை நியமித்திட வேண்டும் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளும் சார்பு அணி நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர்.



