மார்த்தாண்டம், ஏப். 11 –
களியக்காவிளை அருகே செம்மண் விளை என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங் மனைவி ஆனி ஜீவா (39). இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 5ம் தேதி வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றிருந்தார். பின்னர் நேற்று வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த செயின், மோதிரம், கம்மல் உள்ளிட்ட 5 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து ஆனி ஜீவா களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


