நாகர்கோவில், ஜூலை 4 –
நாகர்கோவில் வடசேரி உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று 4ம் தேதி துவக்கி வைத்து, பார்வையிட்டு கூறியதாவது: தமிழக அரசு சார்பில் விவசாயிகளின் விளைபொருட்களைச் சந்தைப்படுத்தவும், இயற்கை சார்ந்த விவசாயத்தை ஊக்கப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமைகளில் வடசேரி உழவர் சந்தையில் ‘ஆர்கானிக் ஃபார்ம்’ எனப்படும் இயற்கை வேளாண் அங்காடி செயல்படும். இன்று தொடங்கப்பட்ட இயற்கை அங்காடியில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், தேன், தேங்காய், தூய மல்லி, கட்டி சம்பா உள்ளிட்ட பாரம்பரிய அரிசி வகைகள், இயற்கை உரங்கள் மண்புழு உரம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், மட்டி பழம் உள்ளிட்ட வாழைப்பழ வகைகள், பலா பழங்கள் மேலும் கண்களை கவரும் பூச்செடிகள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. சுமார் 80 விவசாயிகள் தங்கள் இயற்கை விளைபொருட்களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர். இது ஒரு தொடக்கம் மட்டுமே வரும் நாட்களில் இந்தச் சந்தையை இன்னும் சிறப்பாக மேம்படுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இது விவசாயிகளுக்கு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, அவர்களின் தயாரிப்புகளை மேம்படுத்த உதவும். மேலும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் ‘மாடித்தோட்டங்களை’ அமைப்பதை ஊக்குவித்து வருகிறோம். இது குப்பைக் கழிவுகளைக் குறைக்கவும் உதவும். நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் மாடித்தோட்டங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்துறை இணை இயக்குனர் வாணி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை கீதா, விவசாய பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



