நாகர்கோவில், மே 10:
108 வைணவ தலங்களில் ஒன்றான குமரி மாவட்டம் திருப்பதி சாரம் திருவாழ்மார்பன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜை, தீபாராதனை, அபிஷேகம், சமய சொற்பொழிவு, சுவாமி வீதியுலா, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 9 ம் திருவிழாவான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன், இந்து அறநிலைத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் அறங்காவல் குழு உறுப்பினர்கள் திமுக மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நேற்று இரவு கருட ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா, சப்தாவர்ணம், இரவு 11 மணிக்கு பள்ளி வீட்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று ( சனிக்கிழமை) பத்தாம் நாள் விழாவில் மாலை 5 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா, இரவில் திரு ஆராட்டு, கொடி இறக்குதல், அத்தாழ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.



