விளாத்திகுளம், ஜனவரி 19 –
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. எட்டையாபுரம் அதிமுக பேரூராட்சி செயலாளர் ராஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ. ராஜூ கலந்து கொண்டு பேசுகையில்: சொன்ன சொல்லை காப்பாற்றும் இயக்கம் அதிமுக. குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இனி மகளிர் அனைவரும் தங்களது வாக்குகளை இரட்டை இலை சின்னத்தை தவிர வேற யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலைதான் இன்றைக்கு தமிழக தேர்தல் களம் உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆட்சியில் இருக்கும் போது நிறைவேற்றாமல் எல்லாம் முடிந்து வீட்டுக்குப் போகும்போதுதான் நிறைவேற்றும் நிலை, நான்கு ஆண்டுகள் கழித்து நிறைவேற்றும் நிலை என்று பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் எம்எல்ஏ மோகன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தனஞ்செயன், தனவதி, முனியசத்தி ராமச்சந்திரன், மகேஷ், பால்ராஜ், நகர செயலாளர்கள் மாரிமுத்து, ஆண்டி உட்பட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



