திருத்துறைப்பூண்டி, நவம்பர் 24 –
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் மழை விட்டிருந்த நிலையில் இரவு நேரத்தில் விட்டுவிட்டு கனமழை பெய்தது.
குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி , முத்துப்பேட்டை, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டி பகுதியில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது.
இதன் தொடர்ச்சியாக நேற்றிரவு திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள வானகார தெருவில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதி, கவுன்சிலர் தாஜீதீன், சுகாதார ஆய்வாளர் மாரிசாமி உள்ளிட்டோர் துரிதமாக செயல்பட்டு குடியிருப்புகளில் புகுந்த நீரை வெளியேற்றினர். துரித நடவடிக்கை மேற்கொண்ட திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகத்தினை பொதுமக்கள் பாராட்டினர்.
இதுகுறித்து நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கூறுகையில்: தமிழ்நாடு முதல்வர்,
துணை முதல்வர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.



