நாகர்கோவில், ஜன. 12 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது சபரிமலை சீஸன், மற்றும் தொடர் விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் சுற்றுலா மையங்கள் களைகட்டியுள்ளன. குறிப்பாக பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளும், மகரஜோதி தரிசனம் முடிந்து வரும் ஐயப்ப பக்தர்களும் கன்னியாகுமரியில் குவிவார்கள். இந்நாட்களில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், படகு இல்லம், விவேகானந்தர் பாறை, திருள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலம் ஆகியவற்றில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். இதைப்போல் திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
அதே நேரம் திற்பரப்பு அருவி பகுதியில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால் பெண்கள் உட்பட சுற்றுலா பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். நீண்ட வரிசையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து கழிப்பறை செல்வதாக புகார்கள் எழுதின்றன. இதனால் பெண் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிப் படுகின்றனர்.
இதுகுறித்து திற்பரப்பை சேர்ந்த சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகையில்: திற்பரப்பு அருவியில் விடுமுறை நாட்கள் மற்றும் சீஸன் நேரத்தில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளிக்கின்றனர். குளித்த பின்பு ஆடை மாற்றுவது மற்றும் அங்கு வருவோர்கள் கழிப்பறை செல்வது போன்ற அடிப்படை வசதிகள் மிக அவசியமானது.
இதில் ஆண் சுற்றுலா பயணிகளுக்கு ஆடை மாற்றுதலுக்கு சிரமம் இல்லை. அதே நேரம் பெண் சுற்றுலா பயணிகளுக்கு ஆடைமாற்றும் அறை இருந்தும் அதை முறையாக பராமரிக்கவில்லை. இதைப்போல் சுற்றுலா திட்டத்தில் நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் துவங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை முடியவில்லை. பணிகள் இழுத்தடிக்கப்படுகிறது.
இதனால் அங்குள்ள குறைவான அளவே உள்ள தற்காலிக கழிப்பறை தான் பயன்பாட்டில் உள்ளது. இதில் கூட்டம் அதிகமான நேரங்களில் நீண்ட வரிசையில் பெண்கள் பலமணி நேரம் காத்து நின்று பெரும் சிரமம் அடையும் அவலம் உள்ளது. எனவே தாமதமின்றி திற்பரப்பு அருவி பகுதி சுற்றுலா திட்ட கழிப்பறை பணிகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.



