நாகர்கோவில் மே 31
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் விஷம் போல் ஏறி வரும் விலைவாசி உயர்வாலும், வங்கிகளில் சேமிப்பிற்குரிய வட்டி விகித குறைவாலும், மக்களிடம் நாளுக்கு நாள் சேமிக்கும் பழக்கம் குறைந்து வருவது வேதனைக்குரியதாக உள்ளது. இதனை மீட்க விலைவாசியை குறைப்பதற்கும், வங்கிகளில் சேமிக்கும் பணத்திற்குரிய வட்டி விகிதத்தை அதிகரிக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தளவாய்சுந்தரம் எம் எல் ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமுதாயத்தில் வாழ்கின்ற அனைத்து தரப்பு மக்களும் தங்கள் சம்பாதிக்கும் பணத்தில் செலவு போக கொஞ்சமாவது சேமிக்கும் பழக்கத்தை காலம் காலமாக மேற்கொண்டு வருகிறார்கள். சிறு குழந்தைகள் கூட தங்களுக்கென்று ஒரு உண்டியலை வைத்து அதில் தனக்கு கிடைக்கும் காசினை சேமித்து வைக்கின்ற நல்ல பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். இப்பணத்தை நல்ல காரியங்களுக்கும், சமுதாய பணிகளுக்கும் கொடுத்து உதவுகின்ற நல்ல மனம் படைத்தவர்களாக குழந்தைகள் இருந்து வருகிறார்கள். ஆக சேமிப்பு என்பது நமது கலாச்சாரத்தோடு, பண்பாட்டோடு ஒருங்கினைந்து விளங்கி வருகிறது. சேமிப்பின் பழக்கத்தை, அதன் முக்கியத்துவத்தை ஒவ்வொரு மனிதர்களும் புரிந்து கொண்டு எதிர்கால நலன் கருதி சேமிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி நமது முன்னோர்கள், படித்தவர்கள், புகழ் பெற்ற அறிஞர்கள் விழிப்புணர்வினை ஏற்படுத்தி உள்ளார்கள். குறிப்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் சிறு சேமிப்பு குழுவின் துணைத் தலைவராக இருந்து சிறு சேமிப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு விளக்கினார். தனது திரைப்படங்களின் வாயிலாகவும், சிறு சேமிப்பின் அவசியத்தை மக்களுக்கு கொண்டு சென்று விழிப்புனர்வை ஏற்படுத்தினார்.
எறும்புகள் கூட மழை காலத்தில் தங்களுக்கு தேவையான உணவினை முன்பாகவே சேமித்து வைக்கிறது. இதைப்போலத்தான் மனிதர்களும் தங்களின் பிற்காலத்தில் உடல் நலனுக்காக, தங்களின் தேவைகளுக்காக சேமிக்கிறார்கள். வங்கிகள், அஞ்சலகங்கள் மற்றும் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் தங்களது பணத்தை முதலீடு செய்து சேமிக்கிறார்கள். தங்களது முதுமைகால வாழ்க்கை சிறப்பாக அமைய சேமிப்பு அவசியம் என்பதை உணர்ந்து சேமிக்கும் பழக்கத்தை கையளுகிறார்கள்.
தற்போது கடந்த 3 ஆண்டுகளில் மக்களிடையே சேமிக்கும் பழக்கம் குறைந்து வருவது வேதனையளிக்கிறது. 2020 – 2021-ம் ஆண்டில் ரூ. 23 இலட்சத்து 29 ஆயிரத்து 671 கோடியாக இருந்த குடும்ப சேமிப்பு 2021-2022-ம் ஆண்டில் ரூ. 17 இலட்சத்து 12 ஆயிரத்து 704 கோடியாகவும், 2022-2023-ல் ரூ. 14 இலட்சத்து 16 ஆயிரத்து 447 கோடியாகவும் குறைந்து விட்டது. இந்த சேமிப்பு குறைபாட்டிற்கு விலைவாசி உயர்வும், சேமிப்பின் மூலம் கிடைக்கும் வட்டி விகிதம் குறைவு தான் காரணமாகும். அதிக வருவாயை பெறுவதற்கு தங்களது சேமிப்பை ரியல் எஸ்டேட், வீடு, மனைகள், நிலங்கள் வாங்குவதில் பயன்படுத்து கிறார்கள். மேலும் தங்கம் மற்றும் வருவாய் வரக்கூடியவற்றில் முதலீடு செய்கிறார்கள். இதனால் தற்போது சேமிப்புகள் குறைந்து முதலீடுகள் அதிகரித்து வருகிறது. மேலும் வங்கிகளில் கடன் பெற்று வாகனங்களை வாங்குவதிலும், வீடு கட்டுவதிலும் கவனம் செலுத்துகிறார்கள். இதனால் மாதந்தோறும் வங்கிகளுக்கு கடன் வாங்கியதற்காக தவணைத் தொகை கட்ட வேண்டிய கட்டாயமும் உள்ளது. இதனால் சேமிக்கின்ற பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. குறிப்பாக மக்களின் சேமிப்புகள் அரசுக்கும் பயனளிக்கும்.
ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஈவுத் தொகையாக சுமார் ரூ. 22 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. சேமிக்கும் பழக்கம் மக்களிடம் குறையாமல் தொடர்பதற்கு அரசு மிக முக்கியமாக விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். பல்வேறு வகையான சேமிப்புகளில் மக்கள் முதலீடு செய்வதற்கு வங்கிகளில் வைப்புத் தொகைகளுக்கு கூடுதல் வட்டியினையும், இதற்குரிய வருமான வரி சலுகைகளையும், அரசு வழங்க வேண்டும். சேமிப்பு தான் அனைவருக்கும் உயிர் நாடி. இதனை உணர்ந்து சேமிக்கின்ற பழக்கம் மக்களிடம் தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ள வேண்டும். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல சிறுக சிறுக சேமிக்கும் பழக்கம் நம் ஒவ்வொருவரிடமும் இருந்தால் வாழ்வில் உயரலாம் என்பதை உணர்ந்து நாம் செயல்படுவேம் என அறிக்கையில் கூறியுள்ளார்.